சச்சந்தனும் விசயையும் இன்பந்துய்த்தல்

பொன் அம் கொடி அமிர்து அனாளும் பொன் நெடுங் குன்று அனானும்
அனங்கனுக்கு இலக்கம் ஆகி அம்பு கொண்டு அழுத்த விள்ளார்
இனம் தமக்கு எங்கும் இல்லார் இயைந்தனர் என்ப முக்கண்
சினம் திகழ் விடையினானும் செல்வியும் சேர்ந்தது ஒத்தே.

காதலால் காம பூமிக் கதிர் ஒளி அவரும் ஒத்தார்
மாதரும் களிறு அனானும் மாசுண மகிழ்ச்சி மன்றல்
ஆதரம் பெருகுகின்ற அன்பினால் அன்னம் ஒத்தும்
தீது இலார் திளைப்பின் ஆமான் செல்வமே பெரிதும் ஒத்தார்.

தன் அமர் காதலானும் தையலும் மணந்த போழ்தில்
பொன் அனாள் அமிர்தம் ஆகப் புகழ் வெய்யோன் பருகியிட்டான்
மின் அவிர் பூணினானை வேல் கணார்க்கு இயற்றப் பட்ட
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகியிட்டாள்.

பவழவாய் பரவை அல்குல் என்று இவை பருகும் வேலான்
கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள்
தவழ் மதுக் கோதை மாதர் தாமரைப் பூ அது ஆக
உமிழ் நகை வேலினானும் ஒண் சிறை மணி வண்டு ஒத்தான்.

பளிக்கு அறைப் பவழப் பாவை பரிசு எனத் திகழும் சாயல்
களிக் கயல் பொருவ போன்று கடை சிவந்து அகன்ற கண்ணாள்
ஒளிக் கவின் கொண்ட காமத்து ஊழுறு கனியை ஒத்தாள்
அளித்து அயில்கின்ற வேந்தன் அம் சிறைப் பறவை ஒத்தான்.

துறு மலர்ப் பிணையலும் சூட்டும் சுண்ணமும்
நறுமலர்க் கண்ணியும் நாறு சாந்தமும்
அறு நிலத்து அமிர்தமும் அகிலும் நாவியும்
பெறு நிலம் பிணித்திடப் பெரியர் வைகினார்.

துடித்தலைக் கருங் குழல் சுரும்பு உண் கோதை தன்
அடித்தலைச் சிலம்பினோடு அரவ மேகலை
வடித்தலைக் கண் மலர் வளர்த்த நோக்கமோடு
அடுத்து உலப்பு அரிது அவர் ஊறில் இன்பமே.

இழை கிளர் இள முலை எழுது நுண் இடைத்
தழை வளர் மது மலர் தயங்கு பூஞ்சிகைக்
குழை முகக் கொடியொடு குருதி வேலினான்
மழை முகில் மாரியின் வைகும் என்பவே.

படுதிரைப் பவழவாய் அமுதம் மாந்தியும்
கொடிவளர் குவி முலைத் தடத்துள் வைகியும்
இடியினும் கொடியினும் மயங்கி யாவதும்
கடி மணக் கிழமை ஓர் கடலின் மிக்கதே.

கப்புரப் பசுந்திரை கதிர் செய் மா மணிச்
செப்பொடு சிலதியர் ஏந்தத் தீவிய
துப்பு உமிழ்ந்து அலமரும் காமவல்லியும்
ஒப்பரும் பாவை போன்று உறையும் என்பவே.

மண் அகம் காவலின் வழுக்கி மன்னவன்
பெண் அரும் கலத்தொடு பிணைந்த பேர் அருள்
விண்ணகம் இருள் கொள விளங்கு வெண் மதி
ஒளி நிற உரோணியோடு ஒளித்தது ஒத்ததே.

குங்குமத் தோளினானும் கொழும் கயல் கண்ணி னாளும்
தங்கிய காதல் வெள்ளம் தணப்பு அறப் பருகும் நாளுள்
திங்கள் வெண் குடையினாற்குத் திரு இழுக்குற்ற வண்ணம்
பைங் கதிர் மதியில் தெள்ளிப் பகர்ந்து எடுத்து உரைத்தும் அன்றே.

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்