பதுமுகனுக்கு மணம்புரிவிக்க, சீவகன் இசைந்து கோவிந்தையை ஏற்றல்

கன்னியர் குலத்தின் மிக்கார் கதிர் முலைக் கன்னி மார்பம்
முன்னினர் முயங்கின் அல்லான் முறி மிடை படலை மாலைப்
பொன் இழை மகளிர் ஒவ்வாதவரை முன் புணர்தல் செல்லார்
இன்னதான் முறைமை மாந்தர்க்கு என மனத்து எண்ணினானே.

கோட்டு இளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி
மோட்டுஇள முலையினாள் நின் மட மகள் எனக்கு மாமான்
சூட்டொடு ஒடு கண்ணி அன்றே என் செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ என்று நெஞ்சு அகம் குளிர்ப்பச் சொன்னான்.

தேன் சொரி முல்லைக் கண்ணிச் செந் துவர் ஆடை ஆயர்
கோன் பெரிது உவந்து போகிக் குடை தயிர் குழுமப் புக்கு
மான் கறி கற்ற கூழை மௌவல் சூழ் மயிலைப் பந்தர்க்
கான் சொரி முல்லைத் தாரான் கடிவினை முடிக என்றான்.

கனிவளர் கிளவி காமர் சிறு நுதல் புருவம் காமன்
குனி வளர் சிலையைக் கொன்ற குவளைக் கண் கயலைக் கொன்ற
இனி உளர் அல்லர் ஆயர் எனச் சிலம்பு அரற்றத் தந்து
பனி வளர் கோதை மாதர் பாவையைப் பரவி வைத்தார்.

நாழியுள் இழுது நாகு ஆன் கன்று தின்று ஒழிந்த புல் தோய்த்து
ஊழி தொறு ஆவும் தோழும் போன்று உடன் மூக்க என்று
தாழ் இரும் குழலினாளை நெய்தலைப் பெய்து வாழ்த்தி
மூழை நீர் சொரிந்து மொய் கொள் ஆயத்தியர் ஆட்டினாரே.

நெய் விலைப் பசும் பொன் தோடும் நிழல் மணிக் குழையும் நீவி
மை விரி குழலினாளை மங்கலக் கடிப்புச் சேர்த்திப்
பெய்தனர் பிணையல் மாலை ஓரிலைச் சாந்து பூசிச்
செய்தனர் சிறு புன் கோலம் தொறுத்தியர் திகைத்து நின்றார்.

ஏறம் கோள் முழங்க ஆயர் எடுத்துக் கொண்டு ஏகி மூதூர்ச்
சாறு எங்கும் அயரப் புக்கு நந்தகோன் தன்கை ஏந்தி
வீறு உயர் கலசம் நல்நீர் சொரிந்தனன் வீரன் ஏற்றான்
பாறு கொள் பருதி வைவேல் பதுமுக குமாரற்கு என்றே.

Comments

Popular posts from this blog

பங்காரு அடிகளார் 108 போற்றி மந்திரம்

நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்

கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்